மயிலம் அருகே சாராயம் கடத்தி சென்ற புதுவை சாராய வியாபாரி கைது

அனைத்து பகுதிகளிலும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மயிலம் அருகே சாராயம் கடத்தி சென்ற புதுவை சாராய வியாபாரி கைது
Published on

விழுப்புரம்:

மயிலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது மரக்காணம் அருகே விஷ சாராயம் அருந்தி அதிக உயிர்ப்பலி ஏற்பட்டதால், சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாதிராபுலியூர் பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் பாதிராபுலியூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அவ்வழியாக சந்தேகம் படும்படி சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது, அந்த நபர் நிற்காமல், அதிவேகமாக சென்றுள்ளார். போலீசார் அவரை துரத்தி சென்று மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், புதுவை மணலிபட்டு பகுதியை சேர்ந்த அறிவழகன்(வயது 35), என்பதும், புதுவையில் இருந்து 10 லிட்டர் சாராயம் கடத்தி சென்று பாதிராபுலிர் சுடுகாட்டுபாதை அருகே மறைத்து வைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து அறிவழகனை கைது செய்த போலீசார், 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com