search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிமலை முருகன் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாணம்
    X

    விராலிமலை முருகன் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாணம்

    • கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் நிறைவுவிராலிமலை முருகன் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாணம்
    • திரளான பக்தர்கள் குவிந்தனர்

    விராலிமலை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது விராலிமலை முருகன் கோவிலாகும். இங்கு மலைமேல் முருகன்-வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மலைமேல் உள்ள முருகன்- வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் காலை மற்றும் மாலையில் நடைபெற்றது. மேலும், நாகம், சிம்மம், பூதம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகபெருமான்-வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை மலைமேல் உள்ள முருகனுக்கு தங்க கேடயம் சாற்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனிடம் முருகபெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் அதன் பின்னர் இரவு 7 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது விராலிமலை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' பக்தி கோஷம் விண்ணை பிளந்தது.

    அதனை தொடர்ந்து முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பால், இனிப்பு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர். இவ்விழாவின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் ஏதும் நடக்காத வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் 13 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    விழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முருகப்பெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்ஹார நிகழ்வுக்கு பின்னர் நடைபெறும் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்று முருகப்பெருமான திருக்கல்யாண கோலத்தில் தரிசிப்பது மிகவும் விசேசமானது.

    இதனால் சாமி தரிசனம் செய்ய வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர். முன்னதாக சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    நாளை (திங்கட்கிழமை) முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண ஊர்வலமும் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளியறை ஏகாந்த சேவை நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழாவானது நிறைவு பெறுகிறது.

    இந்தநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை புதுக்கோட்டை தேவஸ்தான செயல் அலுவலர் முத்துராமன் தலைமையில் கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் மண்டகபடிதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×