சுருக்குமடி வலைக்கு அனுமதி-அறந்தாங்கி நாட்டுப்படகு மீனவர்கள் அதிருப்தி

சுருக்குமடி வலைக்கு அனுமதி-அறந்தாங்கி நாட்டுப்படகு மீனவர்கள் அதிருப்தி

சுருக்குமடி வலைக்கு அனுமதி அளித்ததால் அறந்தாங்கி நாட்டுப்படகு மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் வாரத்திற்கு 2 முறை மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது
Published on

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் முத்துக்குடா வரை சுமார் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட கடல் பரப்பில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், பகுதிகளில் சுமார் 600 விசை படகுகளும், மற்ற பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன் பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் இனத்தை பெருக்கவும் சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாரத்திற்கு 2 முறை மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து நாட்டுப்படகு சங்கத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட மீனவர்கள் கூறுகையில், சுருக்குமடி, இரட்டைமடி, ஒற்றைமடி, அறிவலைகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் கடல் வளம் முற்றிலும் அழிக்கப்படுகிறது.

பாசிகள், பவளப்பாறைகள் போன்றவைதான் மீன்களின் ஆகாரமாக உள்ளது. ஆனால் இது போன்ற சுருக்குமடி வலைகள் பயன்படுத்துவதால் மீன் உணவுகள் அழிக்கப்பட்டு மீனினத்தின் பெருக்கம் கேள்விக்குறியாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் மீன்கள் இனமே அழிந்து போகும். அதோடு மட்டுமல்லாது கடல் தொழிலை நம்பி மட்டுமே வாழும் இத்தனை ஆயிரம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம்கேள்விக் குறியாகி விடும்என்று வேதனையுடன் தெரிவித்தனர். எனவே சுருக்குமடி உள்ளிட்ட அறிவலைகள் பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com