தாராபுரத்தில் பொதுமக்கள் போராட்டம்

மயானத்தை சுற்றியுள்ள நபா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். வீடுகளை அகற்றக்கோரி 50க்கும் மேற்பட்டோா் தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 
Published on

தாராபுரம்,

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் மேற்கு தெருவில் ஆதிதிராவிடா்கள் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் வசித்து வரும் பகுதியில் இருந்து சற்று தொலைவில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை ஆதிதிராவிட மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனா். இந்த மயானத்துக்கு செல்லும் பாதை மற்றும் மயானத்துக்கு சொந்தமான நிலத்தை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இறந்த உடல்களை மயானத்துக்கு எடுத்து சென்று அடக்கம் செய்யமுடியாமல் பாதையை மறித்து மயானத்தை சுற்றியுள்ள நபா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், மயானத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனா். இந்த கோரிக்கையை ஏற்று வருவாய்த் துறை அதிகாரிகள் மயானம் மற்றும் அதற்கான பாதையை அளவீடு செய்து எல்லை கற்களை கடந்த மாா்ச் 21-ந்தேதி நட்டுச் சென்றனா். இருப்பினும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றக்கோரி 50க்கும் மேற்பட்டோா் தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா். ஆனால் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜலஜா இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அலுவலக நுழைவாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து ஒரு மணி நேரம் கழித்து வந்த வட்டாட்சியா் ஜலஜா, பொதுமக்களிடம் இருந்து மனுவை பெற்றாா். மயானப் பகுதியை நேரில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com