search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெறும்  பாவூர்சத்திரத்தில் முறையாக சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    X

    பாவூர்சத்திரத்தில் சேறும், சகதியுமாக காணப்படும் சர்வீஸ் சாலைகள்.

    ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் பாவூர்சத்திரத்தில் முறையாக சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    • பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பாலம் புதிதாக அமைக்கப்படுகிறது.
    • ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரத்தில் நான்கு வழி சாலையிலேயே ரெயில்வே மேம்பாலம் புதிதாக அமைக்கப்படுகிறது.

    ஆயிரக்கணக்கான வாகனங்கள்

    இதற்காக மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தச் சாலையானது நெல்லை- தென்காசி பகுதிக்கு செல்லும் பிரதான சாலையாக அமைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.

    இந்நிலையில் முறையாக சர்வீஸ் சாலைகள் எதுவும் அமைக்காமல் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே தோண்டப்பட்ட சாலையின் கழிவுகளை கொட்டி சர்வீஸ் சாலை அமைத்துள்ளதால் அவை சேரும் சகதியுமாகவும் குண்டும், குழியுமாகவும் காட்சியளிக்கின்றன.

    இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    இந்த சர்வீஸ் சாலைகளானது வெயில் காலங்களில் புழுதி பறக்கும் சாலையாகவும், மழை காலங்களில் வயல்வெளிகளில் தொழி அடித்திருப்பது போன்று சேரும் சகதியுமாகவும் காட்சியளிக்கின்றன. மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவசரத்திற்கு சாலையில் சென்றால் தவறி விழுந்து காயம் ஏற்படுகிறது.

    எனவே மெதுவாக பணிகள் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணி மற்றும் நான்கு வழி சாலை பணிகளில் அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு முறையாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறையாக சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×