search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரம் பகுதி உப்பாற்று ஓடையில் தடுப்பணைகள் கட்ட திட்டம் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
    X

    கோரம்பள்ளம் வாய்க்காலில் சீரமைப்பு பணியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    ஓட்டப்பிடாரம் பகுதி உப்பாற்று ஓடையில் தடுப்பணைகள் கட்ட திட்டம் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

    • கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்டம் மூலம் தற்போது உப்பாற்று ஓடையில் தூத்துக்குடி துறைமுகம் வரை ரூ.5 கோடி மதிப்பில் தூர்வாறும் பணி நடைபெற்று 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
    • குளத்தில் அள்ளப்படும் மண், வேறு தனியாருக்கு போய்விட கூடாது என்பதற்காக, பணியில் ஈடுபடும் லாரிகளில் தற்போது ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் பணி நடக்கிறது என்று கலெக்டர் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில், கோரம்பள்ளம் குளம் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2-ம் எண் மடைபாய்மான பிரதான வாய்க்காலை 4 கி.மீ தூரத்திற்கு சீரமைக்கும் பணியை அத்திமரப்பட்டியில் கலெக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது, கலெக்டர் கூறுகையில், இந்த வாய்க்கால் சீரமைப்பு பணி மூலம், 2,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். இந்த பணி 2 வாரங்களில் முடிக்கப்படும். கோரம்பள்ளம் குளத்தை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் விவசாயத்தினை பாதுகாக்கும் வகையிலும், உப்பாற்று ஓடையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் தூத்துக்குடி மாநகர் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அரசு நிதியில் இருந்து ரூ.12 கோடி மதிப்பீட்டில் கோரம்பள்ளம் குளத்தினை தூர்வாரும் பணியினை 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி தொகுதி எம்.பி. தொடங்கி வைத்தார். இந்தபணி தற்போது நடைபெற்று வருகிறது.

    தடுப்பணைகள்

    மேலும், கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்டம் மூலம் தற்போது உப்பாற்று ஓடையில் தூத்துக்குடி துறைமுகம் வரை ரூ.5 கோடி மதிப்பில் தூர்வாறும் பணி நடைபெற்று 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

    கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்டம் மூலமாக உப்பாற்று ஓடையை தூர்வாருவது மட்டுமல்லாமால், ஓட்டப்பிடாரம் பகுதியில் ஓடையில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    கோரம்பள்ளம் குளத்திலிருந்து அள்ளப்படும் மண் தூத்துக்குடி நகரில் பயன்படுத்தப்படாமல் உள்ள தொழில்துறை புறம்போக்கு இடங்களில் கொட்டுவதற்கு, தொழில்துறையிடம் அனுமதி கோரப்பட்டு, கடந்த வாரம்தான் அனுமதி கிடைத்தது.

    லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி

    குளத்தில் அள்ளப்படும் மண், வேறு தனியாருக்கு போய்விட கூடாது என்பதற்காக, பணியில் ஈடுபடும் லாரிகளில் தற்போது ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் பணி நடக்கிறது. இதனை அடுத்து வருகிற வெள்ளி அல்லது சனிக்கிழமையில் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து மண் அள்ளும் பணி தொடங்கி அடுத்த 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. தூர் வாரும் பணி தாமதமானதால், குளத்தின் கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. விவசாயிகளின் ஒத்துழைப்போடு கோரம்பள்ளம் குளம் முழுமையாக தூர்வாரப்படும். இதனால் கோரம்பள்ளம் குளத்தின் நீர் கொள்ளவு அதிகரிக்கும்' என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில், தாசில்தார் பிரபாகரன், ஸ்பிக் முழுநேர இயக்குனர் இ.பாலு, முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி எம்.ஜெ.அம்ரித கவுரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் என்.வி.பூபதி, முள்ளக்காடு சின்னராஜ், உப்பாற்று ஓடை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×