

திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. கொடைரோடு, செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரபரப்பளவில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு பூக்கள் கொண்டு வரப்பட்டு சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து காணப்பட்டது.
குறிப்பாக மல்லிகை 1 கிலோ ரூ.500 வரை குறைந்தது. இந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் உள்ளதாலும், கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதாலும் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. 1 கிலோ மல்லிகை ரூ.1300, முல்லை ரூ.1000, கனகாம்பரம் ரூ.400, சாதிப்பூ ரூ.500, செவ்வந்தி ரூ.130, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.80, கோழிக்கொண்டை ரூ.80, செண்டுமல்லி ரூ.40, ரோஸ் ரூ.100 என்ற விலையில் விற்பனையானது. பூக்கள் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.