தோட்டத்தில் இருந்த பவர் டில்லருக்கு தீ வைப்பு - குழாய்கள் உடைப்பு

3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக போடப்பட்ட குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.
விவசாய தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் எரிந்து நாசமாகி இருப்பதை படத்தில் காணலாம்.
விவசாய தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் எரிந்து நாசமாகி இருப்பதை படத்தில் காணலாம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக போடப்பட்ட குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

இந்த சம்பவத்தில் கொட்டகையில் இருந்த 3 டிராக்டர்கள் கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இதேபோல் வடகரையாத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் பூங்கொடி வைத்தியநாதன், கரைபாளையம் பகுதியில் பூங்கோதை என்பவரது வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பட்டதாரி பெண் நித்யா என்பவர் கொலை சம்பந்தமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நித்யாவின் உறவினரான விவசாயி குழந்தைவேல் (வயது 52) என்பவருக்கு சொந்தமான தோட்டம், கரைப்பாளையம் பிரிவு சாலை அருகே உள்ளது. நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் டிராக்டருக்கு தீ வைத்தனர். மேலும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாயையும் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இதனிடையே அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தோட்டத்துக்குள் தீ எரிவதை பார்த்து, அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வந்து, அங்கு எரிந்து நாசமான பவர் டில்லர் டிராக்டரையும், உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து இதுபோன்று தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இளம்பெண் நித்யா கொலை சம்பந்தமாக அவரது குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்ட உறவினர் குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமான பவர் டில்லர் டிராக்டருக்கு தீ வைத்தும் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களை உடைக்கப்பட்டு இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் கொலை செய்து இறந்து போன நித்தியாவின் உறவினர்கள் அவர்கள் சார்ந்த ஜாதி சங்கத் தலைவர்கள் உட்பட பலரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com