

குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை உள்ளது. இந்த சபை சார்பாக உலக மக்களின் நலன் வேண்டி ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு குபேர பூஜை, நவகிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதனை ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
இந்த பூஜையில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்பையா, தமிழரசி மற்றும் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர்.
இதற்கு முன்பாக கோவிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்கப்பட்டு பவுர்ணமி கோபூஜை நடந்தது. நிறைவாக யாக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.