search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் பஞ்சாயத்து பேச அழைத்து அரசியல் பிரமுகர் தவறாக நடக்க முயன்றார்-இளம்பெண் பரபரப்பு புகார்
    X

    பொள்ளாச்சியில் பஞ்சாயத்து பேச அழைத்து அரசியல் பிரமுகர் தவறாக நடக்க முயன்றார்-இளம்பெண் பரபரப்பு புகார்

    • இளம்பெண்ணுக்கு சொந்தமாக அர்த்தனாரி பாளையத்தில் 5 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது.
    • தி.மு.க. பிரமுகர் எனது சொத்தை அவர்களுடைய பெயருக்கு எழுதி கொடுக்கும்படி தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுக்கிறார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் 41 வயது இளம்பெண். இவர் இன்று காலை கோவை மாவட்ட சூப்பிரண்டு அலுவல கத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர். எனது கணவர் பிரிந்து சென்று விட்டார். எனக்கு சொந்தமாக அர்த்தனாரி பாளையத்தில் 5 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இதில் நான் விவசாயம் செய்தும், ஆடு, மாடுகளை வளர்த்தும் தொழில் செய்து வருகிறேன். மேலும் தையல் தொழிலும் செய்து வருகிறேன்.

    இந்த நிலையில் எனக்கும், எனது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் எனது தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து மின்சார வயரை அறுத்து தண்ணீர் குழாய்களை உடைத்து நான் விவசாயம் செய்ய முடியாமல் செய்தனர்.

    இதுசம்பந்தமாக அவர்களைக் கேட்டபோது தி.மு.க. பிரமுகர் ஒருவரை சந்தித்து பஞ்சாயத்து பேச வருமாறு அழைத்தனர். நான் அவரிடம் சென்ற போது அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து தப்பி வெளியே வந்தேன்.

    பின்னர் இதுகுறித்து ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.

    இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி நான் எனது தோட்டத்தில் தக்காளி ஏற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த எனது பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனது மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயன்றனர். மேலும் அவர்கள் தி.மு.க. பிரமுகர் அழைக்கும் இடத்திற்கு நீ வரவேண்டும், இல்லையென்றால் உன்னையும், உனது குழந்தைகளையும் கார் ஏற்றி கொன்று விடுவோம் என மிரட்டுகின்றனர்.

    மேலும் தி.மு.க. பிரமுகர் எனது சொத்தை அவர்களுடைய பெயருக்கு எழுதி கொடுக்கும்படி தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே தி.மு.க. பிரமுகர் உட்பட 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×