குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் கண்காணிப்பு

சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அருவிக்கரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் கண்காணிப்பு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கோடை மழை ஒரு சில பகுதிகளில் கனமழை யாகவும், சில இடங்களில் சாரலாகவும் பெய்து வருகிறது. காலையில் இருந்து வானம் மேக மூட்டமாக காணப்படும் நிலையில் பிற்பகலில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது.

பிற்பகலில் தொடங்கிய மழை இரவு வரையிலும் நீடித்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 5.2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது. பிரதான அணையான பாபநாசத்தில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. கன்னடியன் கால்வாய் பகுதிகளிலும் பலத்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளுக்கு நீர் வரத்து பெரிய அளவில் இல்லை என்றாலும் கோடை மழையால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக களக்காடு, திருக்குறுங்குடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் தலையணை அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

களக்காட்டில் அதிக பட்சமாக 22.6 மில்லி மீட்டரும், மூலக்கரைப் பட்டியில் 29 மில்லி மீட்டரும் மழை பெய்தது. சேரன்மகாதேவி, முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் அம்பையில் கனமழை பொழிந்தது. வி.கே.புரம், பாபநாசம், அகஸ்தியர்பட்டி, சிவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.அம்பையில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது.

இதற்கிடையே வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பில் வருகிற 22-ந்தேதி வரையிலும் நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க செல்லவேண்டாம் என கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை நீடித்து வரும் நிலையில், இன்று முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாவட்டத்தில் முழுமையாக அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஒரு வாரமாகவே அங்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் வரை பழைய குற்றாலம் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உடனே சுற்றுலா பயணிகள் அனைவரும் அருவியில் இருந்து வெளியேறிய நிலையில் வெள்ளம் திடீரென அருவியின் படிக்கட்டு பகுதிகளிலும் நிரம்பி ஓடியது. இந்த வெள்ளப் பெருக்கின்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தான்.

தீயணைப்பு துறையினர் அவரது உடலை சுமார் 500 அடி தூரத்தில் பாறை இடுக்கில் மீட்டனர். தகவல் அறிந்து அங்கு கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விரைந்து வந்தனர். தொடர்ந்து பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு கலெக்டர் தடை விதித்தார்.

மேலும் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் யாரும் அருவிக்கரைக்கு வர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04633 290548 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே மேற்கொண்டு அசம்பாவி தங்கள் நடைபெறாமல் இருக்க பழைய குற்றாலம் அருவியின் அருகே இரும்பு பேரிகார்டுகள் வைக்கப்பட்டு அருவிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக அருவிக்கரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அணைகளை பொறுத்தவரை ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 6 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கருப்பாநதி, கடனா நதி நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

மாலை 3 மணிக்கு பிறகு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அங்கு இன்று காலை நிலவரப்படி 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

இன்றும் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. குளிர்ந்த சூழ்நிலை நிலவியதோடு மூடு பனியும் நிலவியது. இன்று காலையில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி நிலவியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com