search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் பிரபல தனியார் நகை கடையில் போலீசார் அதிரடி சோதனை
    X

    தஞ்சையில் உள்ள தனியார் நகை கடையில் சோதனை செய்த போலீசார்.

    தஞ்சையில் பிரபல தனியார் நகை கடையில் போலீசார் அதிரடி சோதனை

    • பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.
    • 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சையில் உள்ள நகை கடைக்கு வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய இடங்களில் பிரபல தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது.

    இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.

    இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் ஒரத்தநாடு கிளையில் சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றனர்.

    அப்போது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்து கொண்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேப்போல் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நகைகடைகளும் பூட்டப்பட்டதால் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலரை கைது செய்தனர்.

    மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து அந்த நான்கு நகைக் கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட நகைக் கடைகளில் ஏதாவது நகைகள், ஆவணங்கள் உள்ளதா என்று சோதனை செய்ய பட்டுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில் இன்று தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சையில் உள்ள நகை கடைக்கு வந்தனர்.

    கடையின் உள்ளே நகைகள், ஆவணங்கள் ஏதும் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். மேலும் உரிமையாளர் ஏதாவது பொருளை மறைத்து வைத்துள்ளாரா எனவும் ஆய்வு செய்தனர்.

    மேலும் சோதனை நடைபெறும் போது உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த சோதனை முடிவடைந்த பின்னர் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அந்த நகைக்கடையில் சோதனை செய்ய உள்ளனர்.

    Next Story
    ×