

திண்டுக்கல்:
திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆலோனைக்கூட்டம் இன்று இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.
அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பேசியதாவது:
வேட்பாளர்கள் அனைவரும் கொரோனா விதிகளை பின்பற்றி பிரசாரம் செய்ய வேண்டும். பிரசாரத்துக்கு செல்லும் போது வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரட்டை மாஸ்க் அணிந்திருப்பதுடன் துண்டு பிரசுரங்கள் கொடுக்கும் சமயத்தில் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
முடிந்த வரையில் மதிய நேரங்களில் பிரசாரம் செய்வதை தவிர்த்து காலை மற்றும் மாலை நேரங்களில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
இதனால் உங்களுடன் வருபவர்கள் வெயில் காரணமாக மயக்கமடையும் நிலை தவிர்க்கப்படும். பிரசாரத்தின் போது பட்டாசு வெடித்தல், அதிக ஒலி எழுப்பும் பாடல்களை பாடியபடி செல்லுதல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம் வழிகாட்டியுள்ள நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.