

சென்னை :
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பஞ்சாப் நேஷனல் வங்கியும், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும் இணைந்து ‘ரூபே பிளாட்டினம்’, ‘ரூபே செலக்ட்’ என்ற 2 கடன் அட்டைகளை அறிமுகம் செய்துள்ளன. இதில் பிளாட்டினம் கடன் அட்டை மூலம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும், ‘செலக்ட்’ கடன் அட்டை மூலம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடன் பெற முடியும்.
பிளாட்டினம் அட்டை பெறுவதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ‘செலக்ட்’ அட்டை பெறுவதற்கு ரூ.500 மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். இதுதவிர ரூ.750 ஆண்டு கட்டணம் ஆகும். 3 மாதத்துக்கு ஒரு முறை என்று கடன் அட்டையை பயன்படுத்தினால், ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இந்த கடன் அட்டைகள் மூலமாக ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறலாம். இந்த அட்டைகளை பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் ரூ.2 ஆயிரத்து 500-க்கு மேல் பதஞ்சலி நிறுவன பொருட்களை வாங்கினால் ரூ.50 உச்ச வரம்புடன் 2 சதவீத கேஷ்பேக் சலுகையை பெறலாம். கடன் அட்டைகளை பெறும்போது 300 ‘ரிவார்டு’ புள்ளிகள் வழங்கப்படும். எல்லா கடைகளிலும் கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளும் இந்த கடன் அட்டைகளுக்கு கிடைக்கும்.
‘ரூபே பிளாட்டினம்’, ‘ரூபே செலக்ட்’ ஆகிய 2 கடன் அட்டைகளை பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சாரிய பால்கிருஷ்ணா, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.