search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் 1033 என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம்
    X

    பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் 1033 என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம்

    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் 1033 என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துக்கள் குறித்தும், என்னென்ன காரணங்களால் அந்த விபத்துகள் நடைபெற்றது. மீண்டும் அந்த இடங்களில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் பேசுகையில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் விபத்து ஏற்படும் நேரங்களில் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உடனடியாக அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அவசர ஊர்தி சம்பவ இடத்திற்கு வருகை தந்து போதிய உதவிகள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாது, வாகனங்கள் பழுதாகி நின்றாலோ, எரிபொருள் இல்லாமல் நின்றுவிட்டாலோ, வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, அவசர உதவி ஏற்பட்டாலும் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அழைக்கலாம்.

    24 மணிநேரமும் அவசரகால ஊர்தி தயார் நிலையில் இருக்கும் . 1033 என்ற எண் குறித்து வாகன ஓட்டிகளுக்கோ, பொதுமக்களுக்கோ போதிய விழிப்புணர்வு இல்லை. ஆகையால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரத்தில் உதவ இப்படி ஒரு வசதி உள்ளது என்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசுங்கள். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடைகள் தெரியாத காரணத்தால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்ணை படம்பிடித்து காவல்துறைக்கு அனுப்பும் நவீன தொழில்நுட்பத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் அமல்படுத்த தேவையான திட்ட அறிக்கையினை தயார் செய்து வழங்கிட வேண்டும்.

    அவ்வாறு அனுப்பப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு டிரைவரன் உரிமத்தை ரத்துசெய்து, சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மஞ்சுளா, ஆர்.டி.ஓ. (பொ) சத்திய பாலகங்காதரன், டிஎஸ்பி பழனிசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ) பிரபாகரன், வாகன ஆய்வாளர் ராஜாமணி மற்றும் தாசில்தார்கள், காவல்துறையினர், போக்குவரத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×