

பெரம்பலூர் :
பெரம்பலூர் புறநகர் பகுதியான அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சிவசாமி (வயது 63). இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலத்தின் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து தொழுதூர் நோக்கி ஒரு லாரி சென்றது. லாரி வருவதற்குள் சிவசாமி சாலையை கடந்து விட்டார்.
ஆனாலும் லாரியின் டிரைவரான ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த ராஜூ மகன் சவுந்திரமோகன் (28) லாரியை நிறுத்தி, கீழே இறங்கி வந்து சிவசாமியிடம், லாரி வருவது உனது கண்ணுக்கு தெரியவில்லையா? என்று கேட்டு, தகாத வார்த்தையால் திட்டி, காலணியால் (செருப்பு) அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவசாமி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்திர மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.