என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீக்குளித்து உயிரிழந்த சுங்க சாவடி ஊழியர் குடும்பத்திற்கு நிதி உதவி
- தீக்குளித்து உயிரிழந்த சுங்க சாவடி ஊழியர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது
- விசிக சார்பில் வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் குன்னம் அடுத்துள்ள சு. ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது44) இவர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுங்க சாவடி அதிகாரியிடம் தனக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டார். ஆனால் விடுமுறை அளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். கோபால் ஒருநாள் மட்டும் வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து சுங்க சாவடி அதிகாரிகள் கோபாலை ஐந்து நாட்கள் பணி நீக்கம் செய்தனர். இதில் மன உளைச்சலால் கோபால் இரு தினங்களுக்கு முன்பு தனக்குத்தானே உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், உயிரிழந்த கோபால் மனைவி முனியம்மாவை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிதியுதவி அளிக்க கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மண்டல செயலாளர் கிட்டு, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஏ ஐ டி யு சி மாநிலச் செயலாளர் விஜயகுமார், கிளை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முனியம்மாள் வீட்டிற்கு சென்று நிதி உதவி அளித்தனர்.






