

தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை பெரியகுளம், தேனி, வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.
இதற்காக தேவதானப்பட்டி வழியாக செல்லும் சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலையின் பெரும் பகுதி சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
மேலும் அதில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே உயிர் பலி ஏற்படும் முன்பு இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.