search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொர்க்கவாசலில் கலந்து கொள்ள இரவில் சரித்திர நாடகங்களை நடத்தி வரும் பொதுமக்கள்
    X

    ருக்மாங்கதன் சரித்திர நாடகத்தில் நடித்த கிராமமக்கள்.

    சொர்க்கவாசலில் கலந்து கொள்ள இரவில் சரித்திர நாடகங்களை நடத்தி வரும் பொதுமக்கள்

    • பெண் கதாபாத்திரங்களை ஆண்களே தேர்வு செய்து நடிக்கின்றனர்.
    • விடிய விடிய நடைபெற்ற இந்த நாடகத்தை கிராம மக்கள் தூங்காமல் பார்த்து ரசித்தனர்.

    தஞ்சாவூர்:

    வைகுண்ட ஏகாதசியின் போது, கிராம மக்கள் இரவில் கண்விழிக்க வேண்டும் என்பதற்காக இன்றும் சரித்திர நாடகங்களை நடத்தி வருகின்றனர் ஒரு கிராமத்தினர். அந்த கிராமம் தஞ்சாவூர் அருகே உள்ள கொல்லாங்கரை ஆகும்.

    இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவினை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோவில்களுக்கு சென்று சொர்க்கவாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கம்.

    இரவு நேரங்களில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவை பொழுதுபோக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி ஏகாதசியின் போது மூன்று நாட்களுக்கு சரித்திர நாடகங்களான ராமாயணம், வள்ளி திருமணம், ருக்மாங்கதன், சத்தியவான் சாவித்ரி நாடங்கள் நடத்தப்படுகிறது.

    இந்த நாடகங்களுக்கு தேவையான கதாப்பாத்திரங்களுக்குரிய கலைஞர்கள் கிராம மக்களே நடித்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே தேர்வு செய்து நடிக்கின்றனர்.

    வெள்ளித்திரை, சின்னத்திரை ஆதிக்கம் நிறைந்த இந்த காலத்திலும், சரித்திர நாடகங்களை இந்த கிராம மக்கள் இன்றும் பாரம்பரியத்தோடு நடத்தி அதனை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு ருக்மாங்கதன், சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட சரித்திர நாடகம் நடைபெற்றது.

    விடிய விடிய நடைபெற்ற இந்த நாடகத்தை கிராம மக்கள் தூங்காமல் பார்த்து ரசித்தனர்.

    பின்னர் அதிகாலையில் நாடகம் முடிந்த பிறகு பெருமாள் கோவில்களில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர் .இதே போல் இன்று மற்றும் நாளை இரவும் சரித்திர நாடகங்கள் நடைபெறுகிறது.

    இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் கூறும்போது:

    எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் சரித்திர நாடகங்களை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறோம்.

    இதற்காக கார்த்திகை மாதம் முதல் தேதியிலேயே நாடக பயிற்சியை தொடங்கி விடுவோம். இதில் எங்களது கிராமத்தில் பிறந்த ஆண்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பதை கனவாக கொண்டு நடித்து வருகிறோம். முன்பெல்லாம் ஒரு நாடகத்துக்கு 50 கலைஞர்கள் இருந்தார்கள். தற்போது பத்து கலைஞர்கள் தான் நடித்து வருகின்றனர்.

    தொலைக்காட்சியில் சீரியல்கள் இருந்தாலும் கிராம மக்கள் அன்றைய தினம் சரித்திர நாடகங்களை பார்த்து, ரசித்து வருகின்றனர்.

    இதில் பொதுமக்களிடம் கொஞ்சம் ஆர்வம் குறைந்தாலும், நாடகம் நடத்துவதை பாரம்பரியமாக தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

    நாடகம் நடத்த 7 தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்ததும், இதற்காக விரதம் தொடங்கிவிடும்.

    நாடக கலைஞர்கள் எல்லோரும் விரதம் இருந்து நடித்து வருகிறோம். நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் நாங்கள் சொந்தமாக வைத்திருக்கிறோம்.

    இரவு 10 மணிக்கு தொடங்கும் நாடகம் அதிகாலை 5 மணிக்கு முடியும்.நாங்கள் அனைவரும் ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை நினைத்து தான், அவரது படத்தினை வைத்து வழிபட்டு வருகிறோம்.

    பின்னர் சித்திரை மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு சென்று சித்திரை தேரோட்டத்தில் எங்களது கிராம மக்கள் சுமார் 100 பேராவது சென்று பாட்டுப்பாடி, தேர் வடம் பிடித்து, பெருமாளை வழிபட்டு ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து தரிசனம் செய்து வருவதை இன்றளவும் கடைபிடித்து வருகிறோம் என்றார்.

    பாரம்பரிய முறையில் 200 ஆண்டுகளாக சரித்திர நாடகம் நடத்தி அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு கிராம மக்களே நடித்து வருவது இன்னும் கிராம கலைகள் உயிர்ப்புடன் உள்ளதாக பாரம்பரிய கலைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பெருமிதம் கொண்டனர்.

    Next Story
    ×