

பழனி:
பழனி அருகில் உள்ள நெய்காரப்பட்டிக்கு சின்னகாந்திபுரம், வாய்க்கால்பட்டி வழியாக புளியம்பட்டி மார்க்கத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த சில மாதங்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
நீண்டதூரம் நடந்து வந்தும் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தியும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் இன்று பழனி-உடுமலைப்பேட்டை சாலையில் திடீரென தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் போராட்டத்தை தொடர்ந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.