பல்லடம் அருகே 4 பேர் படுகொலை: குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு- கால் முறிந்த நிலையில் சிகிச்சை

காவல் நிலையத்தில் நேற்று வெங்கடேஷ் உள்பட இருவர் சரண் அடைந்தனர்ஆயுதங்களை கைப்பற்ற போலீசார் அழைத்துச் சென்றபோது தப்பி ஓட முயற்சி
பல்லடம் அருகே 4 பேர் படுகொலை: குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு- கால் முறிந்த நிலையில் சிகிச்சை
Published on

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47), பா.ஜ.க. பிரமுகர் மோகன்ராஜ் (45), மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி (68), செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகிய 4 பேரும் கடந்த 3-ந்தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம், வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பான பிரச்சினையில் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்கிற ராஜ்குமார் (27), திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா (22) ஆகிய 3 பேரும் சேர்ந்து 4 பேரை கொடூரமாக கொலை செய்தனர்.

ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக செல்லமுத்துவை போலீசார் முதலில் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான வெங்கடேசன், சோனை முத்தையாவை 5 தனிப்படைகள் கொண்ட போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்தநிலையில் வெங்கடேசன், சோனை முத்தையா ஆகியோர் நேற்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை நாள் என்பதால் குற்றவாளிகள் 2 பேரையும் பல்லடம் கோர்ட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்துவது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக பல்லடம் துணைக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோவை மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் மற்றும் டி.ஐ.ஜி., சரவண சுந்தர் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் வெங்கடேசன், சோனை முத்தையா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தொட்டம்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 2 பேரையும் இன்று காலை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் தொட்டம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றனர். தொட்டம்பட்டி சென்றதும் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்த பகுதிக்கு அழைத்து சென்றபோது திடீரென வெங்கடேசன் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டார்.

இதனால் போலீசார் பாதுகாப்புக்காக தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வெங்கடேசனின் 2 கால்களில் சுட்டனர். இதில் 2 கால்களில் குண்டு பாய்ந்ததில் வெங்கடேசன் கால்கள் முறிந்து கீழே விழுந்தார். உடனே அவரை போலீசார் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதனிடையே இந்த கொலை தொடர்பாக வெங்கடேசனின் தந்தை அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். அவர் 4 பேர் கொலைக்கு ஆயுதங்களை கொடுத்து உதவியதால் அவரை கைது செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த கொலை வழக்கில் கைதான செல்லமுத்துவையும், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த தொட்டம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றனர். மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுக்க முயன்ற போது தொட்டியில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றதில் செல்லமுத்து வின் வலது கால் முறிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com