

குமாரபாளையம்:
குமாரபாளையம் வார சந்தையில் நூலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் (பொறுப்பு) கமிஷனர் ராஜேந்திரனிடம் மனு கொடுத்துள்ளனர். அதில் அறிவுசார் நூலகம் கட்ட வார சந்தையை தேர்வு செய்து கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. ஏற்கனவே கட்டிடம் கட்டும் இடம் அருகில் ஒரு நூலகமும், கவுரி தியேட்டர் அருகிலும் 2 நூலகங்கள் உள்ளன.
நகரின் மையப்பகுதியான பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகே அரசு இடம் உள்ளது. அங்கு அறிவுசார் நூலகம் கட்டினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் வார சந்தையில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் பரப்பளவு குறுகி வருகிறது. இதனால் வார சந்தை நாட்களில் சந்தை வளாகத்தில் கடை அமைக்க முடியாமல் சாலையில் கடைகள் அமைத்து போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
திருவிழா சமயத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த இந்த வார சந்தையைதான் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே வார சந்தையில் நூலகம் கட்டுமான பணியை, பரிசீலித்து பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நூலகம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.