search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனங்கூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்
    X

    ஆனங்கூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி. 

    ஆனங்கூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்

    • ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • காலை 8 மணிக்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து காப்பு கட்டி பண்டாரம், தினமும் இரவு 7 மணிக்கு மேல் தீச்சட்டியை ஏந்தி கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சியும், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்று வந்தது.

    நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இன்று மாலை பொங்கல், மாவிளக்கு திருவிழா நடைபெறுகிறது.

    முன்னதாக காலை 8 மணிக்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அருகில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில் பால்குடங்களை வைத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அங்கிருந்து புறப்பட்ட பால்குடம் ஊர்வலம், மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை, மாரியம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவி யங்களால் அபிஷேகமும், பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 5 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்தும் பூஜை செய்வர். இரவு வான வேடிக்கையும் நடைபெறுகிறது.

    நாளை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×