களக்காட்டில் வனத்துறை சார்பில் பெண்களுக்கு தையல், அழகுகலை பயிற்சி

களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சி வழங்கப்பட்டது.பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது.
பயிற்சி நடந்த போது எடுத்தப்படம்.
பயிற்சி நடந்த போது எடுத்தப்படம்.
Published on

களக்காடு:

களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சியும், 14 பெண்களுக்கு அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமை தாங்கினார். களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி அன்பு சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், களக்காடு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு சூழல்மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட தையல் ,அழகு கலை பயிற்சியும், அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வனத்தையும், வன விலங்கு களையும் பாதுகாப்பதில் பொதுமக்கள் பங்களிப்பு அவசியமாகும். தேசிய புலிகள் ஆணையமும், வன வளத்தை பாதுகாக்க என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. காடுகளை வனத்துறை அதிகாரியால் மட்டும் பாதுகாக்க முடியாது. பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

விழாவில் களக்காடு சூழல் திட்ட வன சரகர் முகுந்தன், வனவர் சிவக்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், சூழல் மேம்பாட்டு திட்ட பணியாளர்கள், கிராம வனக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com