

தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 766 கற்போர் மையங்களில் 16,063 கற்போர் எழுத்தறிவு பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 766 தன்னார்வ லர்கள் பயிற்றுவித்து வருகின்றனர்.
இந்த கற்போர் மையங்களை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குநர் குமார் புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளை இன்று தருமபுரி ஒன்றியம் கே. ஆலங்கரை மற்றும் பலர் மரத்துக்கொட்டாய் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மையங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது இணை இயக்குநர் அவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு தெரிந்து கொள்வதால் ஏற்படும் பயன்களை பற்றி விரிவாக கற்போரிடம் எடுத்துரைத்தார்.
இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் இரவிக்குமார், துணை ஆய்வாளர் திரு.பொன்னுசாமி மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.