

செந்துறை:
நத்தம் அருகே சிரங்காட்டுபட்டி ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டிபுதூரை சேர்ந்தவர் பெரியசாமி (70). இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் புதூர் மயானத்திற்கு கொண்டு சென்றனர். போகும்வழியில் ஆற்றில் தண்ணீர் போனதால் செல்லமுடியவில்லை.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது தோட்டத்து வழியாக சென்றனர். ஆனால் இதற்கு தர்மலிங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் உடலை கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பெரியசாமியின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் தர்மலிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பெரியசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மங்களப்பட்டி புதூர் மயானத்திற்கு நிரந்தரமாக சாலை அமைத்து தர கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.