திருப்பூரில் தோல் நோயால் அவதிப்படும் சிறுவன்- பெற்றோர்கள் தவிப்பு

பொன்குமரன் பிறக்கும்போதே தோல் நோய் பாதிப்புடன் பிறந்துள்ளான்.தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தர வேண்டும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவர் அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டி ஆகும்.

இவர் தனது உறவுக்கார பெண்ணான ஜெயசித்ராவை திருமணம் செய்துகொண்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா தேவி (11) என்ற மகளும், பொன்குமரன் (8) என்ற மகனும் உள்ளனர்.

இதில் பொன்குமரன் பிறக்கும்போதே தோல் நோய் பாதிப்புடன் பிறந்துள்ளான்.தலை முதல் கால் வரை தோலானது தினமும் உதிர்ந்து கொண்டே இருக்கும். மேலும் இந்த நோய் காரணமாக உடல்சத்து குறைபாடு உள்ளதால் 8 வயதிலும் மூன்று வயது சிறுவன் போன்ற உடல் வளர்ச்சிதான் உள்ளது.

மேலும் தனியாக நடமாட முடியாமலும் உள்ளான். பொன்குமரனின் பெற்றோர்கள் பிறந்ததிலிருந்து, அவனது தோல் நோய் சரியாக வேண்டி தமிழகத்திலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டனர். மருத்துவர்களுக்கும் பொன்குமரனின் பாதிப்பு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

ஆயுர்வேதம், சித்தா என அனைத்து மருத்துவ முறைகளையும் முயன்று பார்த்தவர்கள், பொன்குமரன் குணமடைய கோயில்களுக்கும் சென்று வந்துள்ளனர். இருப்பினும் தோல்நோய் குணமாகவில்லை.

இதுகுறித்து பொன்குமரனின் தந்தை கூறுகையில், பொன்குமரன் பிறந்த போதே தோல் நோய் பாதிப்புள்ளதாகவும், தோலானது தொடர்ந்து உதிர்ந்து கொண்டே இருக்கும் காரணத்தால், தன் மனைவி உடனிருந்து கவனிக்க வேண்டிய காரணத்தால்,தான் மட்டும் வேலைக்கு செல்வதால் குடும்பத்தில் மிகவும் வறுமையான சூழல் உள்ளதாகவும், மருத்துவத்திற்கே பெரும்பகுதி செலவாகிவிடுவதாகவும், வட்டிக்கு கடன் வாங்கி மருத்து செலவுகள் செய்துள்ளதாகவும். தெரிவித்தார்.

மேலும் கோடை காலம் வந்து விட்டால் தோல் வறண்டு உதிர்வதால் அவனது உடல் முழுவதும் எரிச்சலாக இருப்பதால் இரவு முழுவதும் விழித்திருந்து உடலை தடவியும், எண்ணெய் தேய்த்தும் பார்த்து கொள்வோம் . நன்றாக படிக்கும் திறன் இருந்தும்,பள்ளி சென்றால் உடல் உபாதைகளுக்கு தனியாக செல்ல முடியாத காரணத்தால் வீட்டிலேயே வைத்து பார்த்து வருவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் அவர்,தனது மனைவி கர்ப்ப காலத்தில் பாம்பின் ஆன்மாவால் ஏற்பட்ட பாதிப்பில்தான் பொன்குமரனுக்கு இவ்வாறு நேர்ந்துள்ளதாகவும், இதனால் பல கோயில்களுக்கு சென்று வந்தும், அனைத்து வைத்திய முறைகளையும் லட்சகணக்கான செலவில் பார்த்தும் குணமடையவில்லை என வருத்தம் தெரிவித்த அவர், பொன்குமரனுக்கு சிறந்த மருத்துவமளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தங்களது மகன் என்னவென்று அறிந்து கொள்ள முடியாத தோல்நோயினால் பாதிக்கப்பட்டு,அவன் படும் ரண வேதனையை பார்க்க முடியாமல் ஏழை பெற்றோர் தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் தங்கள் மகனுக்கு படிப்பு கிடைக்க வேண்டும் என அந்த ஏழை பெற்றோரின் ஆசையை இதற்கு முன்பு ஆட்சியராக இருந்த விஜய கார்த்திகேயன் நிறைவேற்றி தந்துள்ளார்.அருகில் உள்ள கருவம்பாளை யம் பள்ளியில் இருந்து பாட புத்தகங்களும் கொடுக்கப்படுகிறது.தங்கள் மகனின் நோய் சரியாகி மற்ற பிள்ளைகள் போல் பள்ளி செல்ல வேண்டும் என ஆசையில் உள்ள இவர்களுக்கு தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com