

கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி சுசீலா (49) இவர் தனது கணவர் மற்றும் மகன் சத்யராஜ் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று கொளஞ்சி திம்மலையில் இருந்து அலங்கிரி செல்லும் சாலையில் தனது விவசாய நிலத்தில் உள்ள நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்க்கு சென்றார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்திற்கு வந்தனர். அப்போது கிணற்றில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என சசீலா எட்டிப் பார்த்த போது தவறி கிணற்றில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட கொளஞ்சி, சத்யராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுசீலாவை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சத்யராஜ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.