search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் அருகே  ஓடும் லாரிகளில் தார்பாயை கிழித்து பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல்  போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என புகார்
    X

    நாமக்கல் அருகே ஓடும் லாரிகளில் தார்பாயை கிழித்து பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என புகார்

    • திருச்சி மற்றும் கும்பகோணத்திற்கு மசாலா லோடு ஏற்றிய லாரிகள் அதிக அளவில் செல்கின்றன.
    • நூதன முறையில் ஓடும் லாரியில் ஏறி தார்பாய்களை கிழித்து மசாலா பாக்கெட்டுகளை திருடி செல்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வழியாக திருச்சி மற்றும் கும்பகோணத்திற்கு மசாலா லோடு ஏற்றிய லாரிகள் அதிக அளவில் செல்கின்றன. இந்த லாரிகள் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள வளையப்பட்டி, மைக்கல்நாயக்கன்பட்டி தாண்டி செல்லும்போது, மர்ம நபர்கள் நூதன முறையில் ஓடும் லாரியில் ஏறி தார்பாய்களை கிழித்து மசாலா பாக்கெட்டுகளை திருடி செல்கின்றனர்.

    அதன்படி கடந்த 20 நாட்களில் 12 லாரிகளில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான மசாலா பாக்கெட்டுகள் திருடப்பட்டு உள்ளன. இதுகுறித்து திருச்சி மற்றும் கும்பகோணம் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து நேற்று நாமக்கல் மாநில லாரி உரிமையாளர் செயலாளர் வாங்கலியை சந்தித்தும் முறையிட்டனர். அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், மசாலா பாக்கெட்டுகள் மட்டுமின்றி சோப்பு, பொடி ஏற்றி வரும் லாரிகளையும் குறி வைத்து நாமக்கல் பகுதியில் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது. லாரி லோடு ஏற்றிய பின் அதை உரியவரிடம் ஒப்படைப்பது லாரி உரிமையாளர்களின் பொறுப்பாகும். ஆனால் வழியில் இது போன்ற கொள்ளை சம்பவம் நடப்பதால் லோடு ஏற்றிய நாங்கள் இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

    போலீஸ் நிலையங்களில் எங்களின் புகாரை பதிவு செய்து எப்.ஐ.ஆர் போட்டுக் கொடுத்தால் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து நாங்கள் இழப்பீடு பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை. இது போன்ற வழிப்பறி கொள்ளைகள் இரவு நேரங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது. சம்பவம் நடந்து சில மணி நேரம் கழித்து தான் லாரி டிரைவர்கள் பொருட்கள் கொள்ளை போய் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

    தமிழக அரசு இதுபோன்று லாரியில் திருட்டு நடந்தால், எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்படுகிறதோ அதன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

    மேட்டுப்பட்டி சோதனை சாவடியில் இரவு நேரங்களில் கடந்த ஒரு மாதமாக போலீசார் கண்காணிப்பு பணியில் இல்லை. இதனால் அந்த பகுதியில் திருட்டுகள் அதிக அளவில் நடக்கிறது. எனவே தமிழக முதல்-அமைச்சர் எங்கள் பிரச்சினையை அறிந்து ஓடும் லாரியில் நடைபெறும் திருட்டுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×