

திருச்செங்கோடு:
ஈரோடுமாவட்டம், வெள்ளக்கோயில் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன் (வயது 38). டிரைவர்.
இவர், நேற்று 11.30மணியளவில், பெருந்துறையில் இருக்கும் ஒரு தனியார் அரிசி அரவை மில்லில் இருந்து அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள, ஆத்துமேட்டில் இருக்கும் கோழிப்பண்ணைக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, வையப்பமலையில் இருந்து மல்லசமுத்திரம் செல்லும் சாலையில் நேருநகர் அருகே, லாரி திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில், டிரைவர் முரளிகிருஷ்ணனுக்கு வலது கால் முறிந்தது. அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து, எலச்சிபாளையம் எஸ்.ஐ. ராமச்சந்திரன், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை மாவட்ட எஸ்.ஐ. அகிலன் ஆகியோர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அரிசி ரேஷன் அரிசியா அல்லது வேறு அரிசியா என்பது குறித்து அறிய, அரிசியை கைப்பற்றி, தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பினர்.
இந்த விபத்தால், பலமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.