

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள சாணிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பரமத்தி போலீசார், இந்து அறநிலையத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் அவர்கள் தலைமையில் வரிவசூல் செய்து காப்புகட்டி திருவிழா நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
ஆனால் மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக ஒரு நபரை நியமித்து அவர்கள் தலைமையிலோ அல்லது இந்து அறநிலையத்துறையினர் மூலமோ திருவிழா நடத்தப்பட வேண்டும். வரி வசூல் காப்புக்கட்டி வகையறாவினர் வசூல் செய்யக் கூடாது எனவும் தெரிவித்தனர்.
மேலும் சக்தி அழைக்க வரும்பொழுது திருக்கோவில் சார்பில் ஏற்கனவே உள்ள மேளத் தார்களை அழைத்து வரக்கூடாது எனவும் புதிதாக மேளத்தார்களை ஏற்பாடு செய்து திருவிழா நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதில் இரு தரப்பினர் இடையே சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை வரும் 19-ம் தேதி காலை நடைபெறும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.