search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    X

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவையை தொடங்கி வைத்து புறநோயாளி உள்நுழைவு சீட்டினை வழங்கிய காட்சி. அருகில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், டாக்டர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, கலெக்டர் உமா உள்பட பலர் உள்ளனர்.

    மருத்துவ சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    • அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று 5 நபர்களுக்கு புறநோயாளிக்கான உள்நுழைவுச் சீட்டினை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் 2,513 பயனாளிகளுக்கு ரூ.16.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முன்னிலையில் வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று 5 நபர்களுக்கு புறநோயாளிக்கான உள்நுழைவுச் சீட்டினை வழங்கி தொடங்கி வைத்தார்.

    மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் 2,513 பயனாளிகளுக்கு ரூ.16.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முன்னிலையில் வழங்கினார்.

    700 படுக்கை

    நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை கட்டடங்கள் ரூ.159.452 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 4 லட்சத்து 52 ஆயிரத்து 488 சதுர அடி பரப்பளவில் 700 படுக்கை வசதிகளுடன் கூடிய தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டுள்ளது.

    நலத்திட்ட உதவிகள்

    இந்த விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.16.51 கோடி மதிப்பில் 186 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2450 உறுப்பினர்களுக்கு வங்கி பெருங்கடன், மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,07,000 மதிப்பில் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி, 2 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பற்று அட்டைகள், 2 திருநங்கைகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட வாழ்த்து மடல், சுகாதார துறையின் சார்பில் ரூ.4,000 மதிப்பில் 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகம், 2 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டைகள், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி விளையாட்டு விழா-2023 போட்டியில் வெற்றி பெற்ற 1 நபருக்கு கோப்பை, ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவும் "விருட்சம்" அமைப்பின் மூலம் 3 மாணவ, மாணவிகளுக்கு ரூ.18,400 மதிப்பில் உதவித்தொகை என மொத்தம் 2,513 பயனாளிகளுக்கு ரூ.16.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து ராஜேஷ்குமார் எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.92.30 லட்சம் மதிப்பில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உபகரணங்கள் பெறுவதற்காக காசோலையினை வழங்கினார்.

    மகிழ்ச்சி

    நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி மருத்துவ சேவையை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மருத்துவ சேவையை விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கிற என்னை அழைத்து எதற்காக நமது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கச் சொல்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன்.

    பணிச்சுமை

    எல்லோரும் தினந்தோறும் நன்றாக விளையாடினால் தான், உடற்பயிற்சி செய்தால் தான் எதிர்காலத்தில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ முடியும். அதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான பணிச்சுமையை குறைக்க முடியும் என்பதை உணர்த்த தான் நமது அண்ணன் மா.சு. என்னை அழைத்து இந்த மருத்துவச் சேவையை தொடங்கி வைக்கச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    நாமக்கல் மாவட்டம் பொதுவாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகிற மாவட்டம். தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் பல மருத்துவர்களை உருவாக்கியது

    நாமக்கல் மாவட்டத்தில் இயங்குகிற பள்ளிகள் தான். நீட் தேர்வு இல்லாமல் இருந்தால் இன்னும் அதிகமான ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களால் மருத்துவக் கல்வி பெற முடியும். அதை நோக்கி தான் நம் அரசு செயல்பட்டு வருகிறது.

    நவீன வசதிகள்

    நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்கின்றனர். ஆனால், இந்த மாவட்டத்துக்கென்று ஒரு அரசு மருத்துவக் கல்லூரி இல்லாமல் இருந்தது. இன்றைக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சேவைகள் தொடங்கப்படுவதன் மூலம் அந்தக் குறை நீக்கப்படுகிறது என்பதில் நான் பெருமை அடைகிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்கள் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. இது தி.மு.க. அரசு முதன்முதலில் ஆட்சிக்கு வந்த 1967-ம் ஆண்டு தொடங்கி இப்போது வரை தொடர்கிறது.

    கடந்த 2006-ம் ஆண்டிலேயே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்று கலைஞர் கனவு கண்டார். அதன் விளைவாக இன்று தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நவீன வசதிகள், கூடுதல் படுக்கை வசதி கொண்ட கட்டடங்கள் தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்டன.

    நதி நெருக்கடி

    இன்றைக்கு கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு தான் இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் நிதியை ஒதுக்கி தந்துக் கொண்டிருக்கிறது. நகரப் பகுதிகளில் வாழுகிற மக்களுக்கு இருக்கிற மருத்துவ வசதிகள் கிராமப்புறங்களில் வாழுகிற மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அடுத்து, மருத்துவச் சேவையைத் தேடி மக்கள் வருவதைக் காட்டிலும் மக்களைத் தேடி மருத்துவச் சேவைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது.

    தமிழ்நாட்டின் பல நகரப் பகுதிகளில் இருக்கிற அரசு மருத்துவமனைகளை மட்டுமல்ல கிராமப் பகுதிகளில் இன்றைக்கு இருக்கக் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் பலவற்றை தி.மு.க. அரசு தான் ஏற்படுத்தியது.

    இப்போது நமது முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் 8 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 4 கோடியே 95 லட்சம் கோடி ரூபாய் செலவில் 11 ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 80 லட்சம் ரூபாய் செலவில் கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

    அதோடு மட்டுமல்ல 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் குமாரபாளையம் மற்றும் கொல்லிமலை அரசு மருத்துவமனைகளில் ஆய்வகத்துடன் கூடிய புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ரத்த வங்கி போன்ற மருத்துவ சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டு மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

    இப்போது 2023 -– 2024-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் நாமக்கல் மாவட்ட மக்கள் நல்வாழ்வுப் பணிகளுக்காக 42 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 29 அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தி.மு.க. அரசை பொறுத்தவரை சமுதாயத்தை பாதிக்கிற நோய்களுக்கும், அதேபோல் மக்களை பாதிக்கிற நோய்களுக்கும் தேவையான சிகிச்சைகளை அளித்து குணப்படுத்த வேண்டிய 2 பணிகளிலும் எந்த தொய்வும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    திராவிட மாடல்

    நமது சமுதாயம் ஆரோக்கியமாக வாழவும், மக்கள் ஆரோக்கியமாக வாழவும் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் இந்த அரசு எடுக்கும் என்ற உறுதியினை உங்களுக்கு அளிக்கிறேன். சமீபத்தில், தமிழ்நாட்டில் இருக்கிற சுகாதார வசதிகளைப் பார்த்து குஜராத்தில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் ஆச்சரியத்தோடு பாராட்டிய செய்திகளை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது தான் திராவிட மாடல்.

    மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோல் மாடல் துறையாக விளங்கி வருகிறது. அது மேலும் மேலும் தொடர மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற துறை பணியாளர்களும் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம் (நாமக்கல்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, மாவட்ட கலெக்டர் உமா, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நகர்மன்றத் தலைவர் கலாநிதி, மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×