

பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்கநாயக்கன் பாளையம் அருகே உள்ள கள்ளிக்காடு, வழங்கையான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆவார். இவரது மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் அரசு காரில் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அனிச்சம்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன் மகன் கல்லூரி மாணவர் பிரஜித் (19), நன்செய்இடையாறை சேர்ந்த ராஜேந்திரன் மகனான மெக்கானிக் கண்ணன் (19) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்க நாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் முகேஷ் (25) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.