

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள கோவில்களில் தைப்பொங்கலை முன்னிட்டு சிரப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் தை முதல் நாளை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் வைக்கப்பட்டது.
பரமேஸ்வரர் அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாமிகளின் முன்பு பொங்கல் படையல் போடப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
அதேபோல் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன், மகா மாரியம்மன் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழா நடைபெற்றது.