

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் ஜேடர்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். மற்ற மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக சேர்ந்து வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் காய்ச்சல் உள்ளவர்கள் தனிமனித இடைவெளியுடன் அமரும் அளவுக்கு இருக்கைகள் அமைக்கப்படவில்லை. அதேபோல் ஏராளமானோர் டோக்கன் என்ற பெயரில் பெயர் எழுதப்பட்டு ஒரே கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
இதனால் ஒருவருக்கு ஏற்படும் தொற்று மற்றவர்களுக்கு பரவும் அபாயம் நிலை உள்ளது. தமிழக அரசின் வழிகாட்டுதல் படி இந்த மருத்துவமனையில் கடைபிடிப்பதில்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சனிடைசர் கைகளில் தெளிக்க வேண்டும்.
இருக்கைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்ற விதி இந்த மருத்துமனையில் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.