முககவசம் அணிய வேண்டும்: தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இருமல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாதம் வரை நீடிக்கிறது.
முககவசம் அணிய வேண்டும்: தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சென்னையிலும் ஏராளமானோருக்கு காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் 3 நாட்களில் குணமடைந்து விடுகிறார்கள். ஆனால் சிலருக்கு இருமல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாதம் வரை நீடிக்கிறது.

இந்த காய்ச்சல் எதனால் வருகிறது என்று மருத்துவர்கள் ஆராய்ந்த போது 75 சதவீதம் பேருக்கு இன்புளூயன்சா வைரஸ் காரணமாக காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பலருக்கு இன்புளூயன்சா ஏ வைரஸ் காரணமாகவும், சிலருக்கு இன்புளூயன்சா பி வைரஸ் காரணமாகவும் காய்ச்சல் பரவி உள்ளது. இன்னும் சிலருக்கு டெங்கு காய்ச்சலும் பரவி இருப்பது தெரியவந்து உள்ளது.

இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலும் சிலருக்கு அடினோவைரஸ் மற்றும் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் பிற வைரஸ் தொற்றுகளும் பரவி இருப்பதை மாநில பொது சுகாதார ஆய்வகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

பருவமழை தமிழகம் முழுவதும் தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. சென்னையிலும் அதிகம்பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்பட்டு காய்ச்சல் ஏற்படுகிறது.

தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற தொற்று நோய்கள் ஏற்படுகிறது.

குழந்தைகள் பள்ளி அல்லது பயிற்சி மையங்களுக்கு செல்லும் போது தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவுகிறது. நாங்கள் காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை பரிந்துரைக்கிறோம். குழந்தைகளுக்கு இருமல் சிரப் சிறிய அளவில் நிவாரணம் தருகிறது.

பெரும்பாலானவர்கள் தொற்று நோய் அறிகுறிகளுக்கு மருந்து சாப்பிடாததால் தீவிர பாதிப்பு ஏற்படுகிறது. முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதனால் அவர்களுக்கு தடுப்பு ஊசிகளை எடுக்க நாங்கள் அறிவுறுத்துகிறோம். கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் முககவசம் அணிய வேண்டும்.

காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இருமல், தும்மல் அல்லது பேசும்போது இந்த வைரஸ், சுவாச துளிகள் மூலம் பரவுகிறது. முககவசம் அணிவதால் தொற்று பரவுவது குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com