

அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்த உதயநத்தம் தேவாங்கா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு முத்ரா கடனை வழங்கி தொடக்கி வைத்தார். முன்னதாக அவர் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். இந்நிகழ்வில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் கே.மோகன், கும்பகோணம் சரக அலுவலர் பூபதி, கைத்தறி ஆய்வாளர் செல்வகுமார், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வெ.பாலசுப்ரமணியன் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகள், நெசவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.