எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் எப்போது? அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு வெளியாகும்.
எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் எப்போது? அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது
Published on

சென்னை:

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கமாக, நீட் தோ்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாள்களில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசுகளின் கலந் தாய்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கிவிடும். இந்த ஆண்டு நீட் தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 4-ந் தேதி வெளியானது.

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட 6 போ் முழு மதிப்பெண் பெற்றது போன்றவை நாடுமுழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடா்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதால், நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

நீட் தோ்வு தொடா்பான வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதனால், அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மாநில அரசு நடத்தும் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com