என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திம்பம் மலைப்பாதையில் சாலையோரம் சுற்றிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்
    X

    திம்பம் மலைப்பாதையில் சாலையோரம் சுற்றிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்

    • சில வாகன ஓட்டிகள் சிறுத்தையும் நடமாட்டத்தை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
    • திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் திம்பம் மலைப்பகுதி தமிழக - கர்நாடகவை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதி மத்தியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதியை 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். திம்பம் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் உள்ள சாலையோரம் அடர்ந்த பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையோரம் உலா வந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர்.

    சில வாகன ஓட்டிகள் சிறுத்தையும் நடமாட்டத்தை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரம் சாலையோரம் உலா வந்த சிறுத்தை சாலை தடுப்பு சுவரை தாண்டி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து இருந்து கிளம்பிச் சென்றனர். சமீபகாலமாக திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    எனவே திம்பம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×