

வள்ளியூர்:
ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பாமா வரவேற்று பேசினார். முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை நிபுணர், மனநல மருத்துவர், முட நீக்கியல் நிபுணர் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர். முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்குதல், முதல்-அமைச்சர் காப்பீடு திட்டம், இலவச பஸ் பயண சலுகை, இலவச ரயில் பயண சலுகை, உதவி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் மாத உதவி தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்து இருந்தனர்.