கொள்முதல் நிலைய இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

குத்தாலம் அருகே கொள்முதல் நிலைய இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
நெல் கொள்முதல் நிலைய இடமாற்றத்தை கண்டித்து  விவசாயிகள் உண்ணாவிரதம்.
நெல் கொள்முதல் நிலைய இடமாற்றத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்.
Published on

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கடலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருவேள்விக்குடி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது.

இந்நிலையில், திருவேள்விக்குடி கிராமத்தில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிராம விளையாட்டு மைதானத்தில் இருந்த கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வைத்த நிலையில், அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இருப்பினும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று புதிய இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் தொடங்கியது. இதனால் பழைய இடத்தில் நூற்றுக்கணக்கான மூட்டைகளுடன் காத்திருந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிக தொலைவு உள்ளதால் தங்களுக்கு மூட்டைகளை எடுத்துச் செல்வதில் சிரமமும், கூடுதல் செலவும் ஏற்படும் என்றும், சமீபத்தில் தங்கள் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி, பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், கடந்த 15 ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்த இடத்தில் நெல் மூட்டைகளுடன் நேற்றுமுதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

விவசாயி தங்க ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மருத்துவர் செல்வராஜ், தங்கமகேஸ்வரன், ஜீவானந்தம் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மீண்டும் தங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் வரை போராட்டம் நீடிக்கும் எனத் தெரிவித்து, இரவிலும் போராட் டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com