தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணை (கோப்பு படம்)
மஞ்சளாறு அணை (கோப்பு படம்)
Published on

கூடலூர்:

தேவதானப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

கொடைக்கானலில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வறண்டுகிடந்த மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையில் 51 அடியை எட்டும் போது முதல் வெள்ள அபாய எச்சரிக்கையும், 53 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை, அதனைதொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

தற்போது அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 23 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது. 866 கனஅடிநீர் வருகிறது. 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.13 அடியாக உள்ளது. 374 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 93.15 அடியாக உள்ளது. 26 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

தேக்கடி 6.4, கூடலூர் 14.2, சண்முகாநதிஅணை 13.6, மஞ்சளாறு 7, பெரியகுளம் 3.6, வீரபாண்டி 4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com