கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவருக்கு ஓராண்டு சிறை

மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றார்.ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிப்பு.
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவருக்கு ஓராண்டு சிறை
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் குமரன் தெரு பகுதியில் ஆதி சாந்தகுண மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந்தேதி இரவு மர்ம நபர் ஒருவர் கோவிலின் உள்ளே நுழைந்து கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றார்.

இந்த காட்சி கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோவிலின் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற நபர் கும்பகோணம் செட்டி மண்டபம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியைச்சேர்ந்த

மணி என்பது தெரியவந்தது. இதையடுத்து மணியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1-ல் நீதிபதி பாரதிதாசன் முன்பு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், குற்றம் நிரூபிக்கப்பட்ட மணிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com