பொது இடத்தில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது?-உதயகுமார் கேள்வி

பொது இடத்தில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது? என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதி.மு.க. உள்ளது.
ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
Published on

மதுரை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதி.மு.க. உள்ளது. ஏழைகளுக்காக 1972 -ம் ஆண்டு இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அவர் இருக்கும் வரை தி.மு.க. கோட்டை பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை. அதனைத்தொடர்ந்து அம்மா அதி.மு.க.வை நாட்டின் 3-வது பெரிய இயக்கமாக உருவாக்கினார்.

தி.மு.க.வினர் எங்களை வழிநடத்திச் செல்லும் ஜெயலலிதா காலில் விழுவதை கேலி-நையாண்டி செய்தனர்.

இன்றைக்கு தி.மு.க.வின் தன்மானம், சுயமரியாதை எங்கே போனது? தஞ்சையில் முதல்-அமைச்சரின் மகன் உதயநிதி வந்தபோது தஞ்சை மேயர் அங்கியுடன் சென்று உதயநிதியின் காலில் விழுந்துள்ளார்.

இதனை உதயநிதி கண்டிக்காமல் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டுள்ளார். காலில் விழுவதை விமர்சித்த தி.மு.க. இதற்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறது?

மேயர் அங்கியுடன் பொது இடத்தில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது? மூத்தோர் காலில் இளையோர் விழுவது தான் தமிழர் பண்பாடு, கலாச்சாரம்.

இன்றைக்கு வயது குறைந்தவர் காலில் மூத்தோர் விழுந்து சுயமரியாதையை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

இந்த புது கலாச்சாரம் தான் தி.மு.க. அரசின் திராவிட மாடலா? என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com