search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழையால் கிராமம் துண்டிப்பு
    X

    கவுண்டமாநதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்தது தண்ணீர் செல்கிறது.

    கனமழையால் கிராமம் துண்டிப்பு

    • திருமங்கலம் அருகே கனமழையால் கிராமம் துண்டிக்கப்பட்டது.
    • மழைநீர் நேசனேரி கிராமத்தை சூழ்ந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை 10 மணிவரை பெய்தது.

    இதனால் நகரில் மின்தடை ஏற்பட்டது. கன மழையால் கவுண்டமா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழைநீர் நேசனேரி கிராமத்தை சூழ்ந்தது. இதனால் செங்கப்படையிலிருந்து நேசனேரி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.

    இதேபோல் மதுரை- விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நேசனேரி விலக்கு வழியாக செல்லும் தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியதால் அந்த வழியாகவும் நேசனேரி கிராமத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நேசனேரி கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் கிராமமக்கள் வீடுகளில் முடங்கினர்.

    செங்கப்படை, திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கிராமத்தை விட்டுவெளியே செல்ல முடியவில்லை. கூலித்தொழில் மற்றும் விவசாய பணிக்கு செல்லும் கிராமமக்களும் வெளியேற வழியின்றி தவித்து வருகின்றனர்.

    திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டையில் ரெயில்வே தரைப்பாலம் உள்ளது. திருமங்கலத்திலிருந்து காரியாபட்டிக்கு செல்லும் சாலையில் ெரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வசதியாக இந்த தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

    மழைகாலத்தில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை கொடுத்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் மேலக்கோட்டை தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகளவில் தேங்கியது.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு வெள்ளைப்பூடு, கருவாடுகளை ஏற்றி கொண்டு சென்ற மினிவேன் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேலக்கோட்டை தரைப்பாலத்தை கடக்க முயன்றது. நடுப்பாலத்தினை அடைந்த போது அந்த வேன் தண்ணீரில் சிக்கி கொண்டது.

    இது குறித்து மேலக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் கோபி பொதுமக்கள் உதவியுடன் மினிவேனை தரைப்பாலத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்.

    மழைநீர் அதிகளவில் தரைப்பாலத்தில் தேங்கியதால் திருமங்கலத்தில் இருந்து காரியாபட்டி செல்லும் பஸ்கள், லாரிகள் மாற்றுபாதையான சாஸ்திரிபுரம் ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றன.

    மதுரை மாவட்டம் எழுமலையில் உற்பத்தியாகி வரும் தெற்கு ஆறு சின்ன–கட்டளை, சவுடார்பட்டி, மீனாட்சிபுரம், கிழவனேரி வழியாக செங்கப்படையை அடுத்த நேசனேரியில் கவுண்டமாநதியுடன் இணைகிறது.

    இங்குள்ள சிவரக்கோட்டை பகுதியில் 2 ஆறுகளும் கமண்டல நதியாக மாறுகிறது. திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் விவசாயத்திற்கு பலன் தரும் கமண்டல நதி காரியாபட்டியில்உள்ள குண்டாற்றில் ஒன்று சேருகிறது. திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் கமண்ட நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீண்ட நாள்களுக்கு பின்பு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கண்ட சிவரக்கோட்டை பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    Next Story
    ×