

மதுரை
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை சோலை அழகுபுரம் 3-வது தெரு வ.உ.சி.தெரு, என்ற முகவரியில் குடியிருக்கும் மரியசூசை மகன் பிரகாஷ், பாலமேடு சுந்தராஜன், சங்கரன்கோவில் மாரி ச்சாமி, உடுமலைபேட்டை அய்யாசாமி, சண்முகத்தாய் ஆகியோர் பங்குதாரர்களாக கூட்டுசேர்ந்து மதுரை, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் "ரிச் இந்தியா அக்ரோடெக் லிமிடெட்'' என்ற நிறுவனத்தின் முகவர்களாக இருந்தனர்.
அவர்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை ஆரம்பித்து அதில் வருடாந்திர தவணை திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்களை நம்ப வைத்தனர். இந்த நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த பின்னர் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு தேனி, அனஞ்சி விலக்கு, என்.ஜி.ஒ.காலனியை சேர்ந்த மோகன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் விசாரணை முடிந்து, விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
எனவே "ரிச் இந்தியா அக்ரோடெக் லிமிடெட்'' நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, எண். 39 விஸ்வநாதபுரம் மெயின்ரோடு, மதுரை -14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன்பேரில் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.