search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வீசி தாக்கி கொத்தனார் கொடூரக்கொலை
    X

    கல்வீசி தாக்கி கொத்தனார் கொடூரக்கொலை

    • மதுரையில் கொத்தனார் கல்வீசி தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பி.பி.குளம் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 61), கொத்தனார். இவரது மனைவி சிவகாமி. மோகனும், ஆட்டோ டிரைவர் வடிவேல் (43) என்பவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்களுக்கு இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று வடிவேல் ஓட்டி வந்த ஆட்டோ நிலை தடுமாறி மோகன் வீட்டின்மீது மோதியது.

    இதனை மோகன் தட்டி கேட்டார். அப்போது அங்கு வந்த வடிவேல் மனைவி விஜி கணவருக்கு ஆதரவாக பேசினார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல், அவரது மனைவி விஜி ஆகியோர் கல்வீசி மோகனை கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவத்தில் மோகன் படுகாயம் அடைந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மோகன் மனைவி சிவகாமி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மோகனை ஆட்டோ டிரைவர் வடிவேல், அவரது மனைவி விஜி ஆகிய 2 பேரும் கல்வீசி தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொத்தனாரை கொடூரமாக கொலை செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×