வியாபாரியின் மகள் பட்டப்பகலில் கடத்தல்

உசிலம்பட்டியில் வியாபாரியின் மகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டார்.போலீஸ் அதிரடியால் 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டாள் சிறுமியை கடத்தி சென்ற 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிறுமி ஜனனி.
சிறுமி ஜனனி.
Published on

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 4 வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளது.

பார்த்தசாரதி மதுரை-உசிலம்பட்டி ரோட்டில் உள்ள பூதிப்புரம் விலக்கில் பிராய்லர் கடை நடத்தி வருகிறார். மேலும் உசிலம்பட்டி நகர் பகுதியில் பேக்கிரி கடையும் வைத்துள்ளார். இன்று காலை பார்த்தசாரதி மனைவி மற்றும் குழந்தையுடன் பிராய்லர் கடையில் வியாபாரம் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அருகில் உள்ள வீட்டின் முன்பு சிறுமி ஜனனி விளையாடி கொண்டிருந்தாள். காலை 11 மணியளவில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும்-பெண்ணும் பிராய்லர் கடைக்கு வந்தனர். அவர்கள் விளையாடி கொண்டிருந்த ஜனனியிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது மர்ம நபர்கள் எங்களுடன் வந்து விடுகிறாயா? என குழந்தையிடம் கேட்டுள்ளனர். ஏதும் அறியாத அந்த குழந்தையும் அவர்களுடன் செல்வதாக தெரிவித்தாள்.

மேலும் மர்ம நபர்கள் வித்யாவிடம் குழந்தையை அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். அதை வித்யா விளையாட்டாக எடுத்துக் கொண்டார். ஆனால் மர்ம நபர்கள் குழந்தையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமானார்கள்.

1 மணி நேரத்திற்குள் மேலாகியும் அவர்கள் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பார்த்தசாரதி-வித்யா மற்றும் குடும்பத்தினர் ஜனனியை தேடி பார்த்தனர். ஆனால் பலனில்லை. இதையடுத்து குழந்தை கடத்தல் தொடர்பாக உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜய் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். கடத்தல் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து உசிலம்பட்டியை சுற்றியுள்ள சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 3 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார் சிறுமி ஜனனியை மீட்டனர். சிறுமியை கடத்தி சென்ற 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com