சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி

மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி
Published on

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் ஊரகப்பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளில் வாழும் வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீடு வழங்க பல்வேறு வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் வீட்டு வசதி, இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் 1985 -86 முதல் 2010-11 வரை கட்டப்பட்ட கான்கிரீட் மேற்கூரை மிகவும் மோசமாக உள்ள வீடுகள், மோசமான நிலையில் வாழ தகுதியில்லாத வீடுகள் கணக்கெடுப்பு இன்று (8-ந் தேதி) முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சமுதாய வள பயிற்றுநர் மூலம் Repairs to Rural Houses என்ற செல்போன் செயலி வாயிலாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த கணக்கெடுப்பை சிறந்த முறையில் முடிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com