search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆமை வேகத்தில் நடக்கும் சாக்கடை-குடிநீர் திட்டப்பணிகள்
    X

    ஆமை வேகத்தில் நடக்கும் சாக்கடை-குடிநீர் திட்டப்பணிகள்

    • ஆமை வேகத்தில் சாக்கடை-குடிநீர் திட்டப்பணிகள் நடக்கிறது.
    • பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வைத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டுக்கு முன்பு வரை 72 வார்டுகள் இருந்தன. பின்னர் கூடுதலாக 28 வார்டுகள் சேர்க்கப்பட்டு 100 வார்டுகளாக மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டது.இதனால் திருப்பரங்குன்றம், கூடல் நகர், ஆனையூர், பெருங்குடி, திருப்பாலை, உள்ளிட்ட பகுதிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

    பல ஆண்டுகளாக இந்த விரிவாக பகுதிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் சரிவர இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.ஆனால் மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர், சாக்கடை வரிகளை முறைப்படி செலுத்தி வருகிறார்கள்.

    பல மாதங்களாக விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் தெருக்கள் உள்ளன. செல்லூர்-குலமங்கலம் சாலை இன்னும் சீரமைக்கப்ப டாததால் வாகனங்கள் செல்லமுடியால் திணறி வருகிறது.

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தபால் தந்தி நகர், பார்க் டவுன், கோசா குளம், ஆனையூர், கூடல் நகர், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வீதிகளும் குண்டும், குழியுமாக உள்ளன. மழை காலங்களில் இந்த தெருக்களில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் சேறும், சகதியும் அலங்கோலமாக காட்சி யளிக்கிறது.

    அங்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளும் சரிவர மூடப்படாததாலும், இந்த பணிகள் மந்த நிலையில் நடப்பதாலும் வீதிகள் சீரமைப்பின்றி வாகனங்களில் செல்லும் பெண்களும், மாணவிகளும் பள்ளங்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

    சில இடங்களில் மட்டும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் ஓரளவு நடைபெற்றுள்ளன. இன்னும் பணிகள் பல்வேறு இடங்களில் அரை குறையாகவே காணப்படுகிறது. பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து சாலைகளில் வாகனங்களில் செல்லவும், நடக்கவும் முடியாமல் வேதனை அடைந்து வருகிறார்கள்.

    மாநகராட்சிக்கு சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் கட்டினாலும் மாநகராட்சி அடிப்படை வசதிகளை செய்து தராமல் தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதாக விரிவாக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக வீதிகள் மழைநீர், மற்றும் சேறும் சகதியுமான காணப்பட்ட நிலையில் தற்போது மேடு, பள்ளங்களால் மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

    மாநகராட்சி அதிகாரிகள் தெருக்களை சீரமைப்பதில் மெத்தனம் காட்டுவதாகவும், புகார் தெரிவிக்கும் மக்க ளிடம் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கே இந்த நிலை என்றால் மற்ற பகுதிகளுக்கு கேட்கவா வேண்டும்?

    கலைநகர், பட்டிமேடு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தற்போது தார் சாலைகள் அமைத்துவிட்டு மற்ற தெருக்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மதுரை மாநகராட்சி நிர்வாகம் இனியாவது விழித்துக் கொண்டு சேதமடைந்த சாலைகள் மற்றும் வீதிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்ட பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வைத்துள்ளனர்.

    Next Story
    ×